சனி, 13 டிசம்பர், 2014

லிங்கா - விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட ஒன்றரை மாதங்களாக அடித்து பிடித்து தலைவரின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்த கோடான கோடி தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்.

போன மாசம் வெளியான லிங்கா பாடல்களில், ஒன்று கூட
ஏ.ஆர். ரகுமானின் இசை என்று சொல்லி கொள்ளும்படி இல்லை.
'மோனா மோனா ' பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது என யாரோ சிலர் சொன்னதால், அதையும் கேட்டு ஏமாந்து போயிருந்தேன். சரி... மோனா போனா போகட்டும்ன்னு விட்டுவிட்டு, நமக்கு படம் தானே முக்கியம் என்று ஆவலாய் இருந்தேன்.

பெரும்பாலும் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால், அடுத்த படம் கண்டிப்பாக மெகாஹிட்தான். கோச்சடையான் சரியாக போகவில்லை என்பதால், எப்படியும் இந்த படம் நன்றாகதான் இருக்கும் என்று தலைவர் மீதும், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மீதும் அளவற்ற நம்பிக்கை வைத்து இன்று ஏ.ஜி.எஸ். திரையரங்கில் சென்று படம் பார்த்து விட்டு........ சற்றே கனத்த மனதுடன் தான் வீடு திரும்பினேன்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தலைவர் தான் திரையில் மின்னுகிறார். ஆரம்ப பாடலில் வருவதிலிருந்து டூயட் வரை தலைவரின் நடை, பேச்சு, பன்ச்சு, ஸ்டைல் இன்னும் எதுவுமே குறையவில்லை. ப்ப்பா..தலைவா!!! 63 வயசென்ன; 75 வயசிலும் நீ நடித்தால் இதே போன்று, ஏன் இதை விட அதிகமாக கூட்டம் கூடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

படத்தில் இரண்டு ரஜினி. ஒருவர் பேரன், இன்னொருவர் தாத்தா. முதல் ரஜினி யூத் கெட்-அப்பில் அசத்துகிறார் என்றால், பிளாஷ் பாக்கில் வருபவர் பிரிட்டிஷ் கலெட்டராகவும், ராஜா லிங்கேஷ்வரனாகவும் கம்பீரமாய் வாழ்ந்திருக்கிறார்.
 

முதல் ரஜினியை இளமையாக காட்ட ரொம்ப முயற்சி செய்துள்ளனர்- உடையிலும், வசனத்திலும் (உதாரணம். நண்பேன்டா, திருட்டுப் பய... )
பொதுவாக சந்தானத்தின் காமெடி ஒன் லைனர்கள் பெரிய நடிகர்களின் முன் எடுபட வாய்ப்பில்லை. இதிலும் தான்.

கதை ட்ரைலரிலேயே எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஊருக்காக தான் சொந்த செலவில் அணை கட்டி கொடுக்கிறார், ராஜா லிங்கேஷ்வரன். அணை கட்டும் போது அதில் வரும் பிரச்சனைகள், அணை கட்டி முடித்த பிறகு வரும் பிரச்சனைகளும் தான் படத்தின் மீதி கதையோட்டம். ராஜாவின் அரண்மனை, கட்டிகொண்டிருக்கும் அணை, என படத்தில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேல். ராஜா லிங்கேஷ்வரனின் பாத்திரத்தில் சில வசனங்களை அசால்டாக பேசியுள்ளார் ரஜினி. வெள்ளையனுக்கு எதிராக பேசும் இடங்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் பன்ச்சு வைத்திருக்கலாம்.

சூப்பர் ஸ்டார் நகை திருடும் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். ஆனால் பாலத்திலிருந்து ஓடோடி வந்து ரயிலில் பா.....ய்ந்து ஏறுவது; தரையில் ஓடிவந்து, விண்ணில் பறக்கும் ஹெலிகாப்டரை விரட்டி பிடிப்பது; பத்தாவது மாடியிலிருந்து கயிற்றை படித்து கொண்டு விறுவிறுவென இறங்குவது என பல ஆக்க்ஷன் காட்சிகளை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பார்த்து பூரித்துள்ளதால், இதை அவ்வளவு பெரிய குறையாக நம்மாட்கள் எடுத்து கொள்ள மாட்டார்கள்.

படத்தில் இரு நாயகிகள். அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா. இருவரும் தலா ஒரு பாடலுக்கு டூயட் பாடி செல்கிறார்கள். இருவருக்குமே நடிக்க சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சோனாக்ஷிக்கு தமிழ் பெண்ணின் முக சாயலே வராததால், அனுஷ்காவே முன்னணியில் ஜொலிக்கிறார்.

கதையின் கரு புதுசுதான். காப்பியடிக்கபட்டது/ திருடப்பட்டது என்பதையெல்லாம் கூட ஓரம் கட்டி வைத்து விடுவோம். தலைவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது ஊரறிந்த ஒன்று தான். கொஞ்சம் வித்தியாசமான கதைக்காகதான் இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பார் தலைவர். அவரை ரசிக்க வந்தவர்கள், அவரை மட்டுமே படம் முழுக்கவும் காண முடியும். இது ஒரு சாதாரண கமர்ஷியல் ரஜினி படம். மத்தபடி ஏதுமில்லை.

சூப்பர் ஸ்டார் என்னும் மாய பிம்பத்திற்காக உருவாக்கப்பட்ட கதை என்று இயக்குனரும், கதையாசிரியரும் ஆடியோ ரிலீஸில் சொன்னார்கள். ஹ்ம்ம்.. படம் சுத்த மோசம் என்று சொல்விட முடியாது. நீங்கள் ரஜினி ரசிகரா? அப்போ கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். திரைக்கதையை மட்டும் கொஞ்சம் சரியாக கவனித்திருந்தால், ராஜா லிங்கேஷ்வரன் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லார் மனதிலும் அணை கட்டி கவர்ந்திருப்பார்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

அரவிந்த் சொன்னது…

\\சற்றே கனத்த மனதுடன் தான் வீடு திரும்பினேன்.\\

Same here.. My review

http://sivigai.blogspot.com/2014/12/blog-post.html

Valaipakkam சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரஜினி ரசிகரான நண்பரும் வருத்தத்தோடு படம் போச்சு ஜி என்றார். ரஜினியை மட்டும் விரும்புபவர்கள் பார்க்கலாம்.